
கம்பாலா, ஏப்ரல்-12-பொதுவாக விலங்குகள் தங்களது கூட்டத்தைப் பாதுகாக்க மற்ற கூட்டங்களுடன் மோதுவதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால், மனிதர்களைப் போலவே ஒரே கூட்டத்தைச் சேர்ந்த சிம்பன்சி குரங்குகள் தங்களுக்குள் பிரிந்து ‘உள்நாட்டுப் போரில்’ ஈடுபடும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் (Kibale National Park) உள்ள உலகின் மிகப்பெரிய சிம்பன்சி கூட்டத்திற்கு இடையே தான், சுமார் 10 ஆண்டுகளாக இந்த “உள்நாட்டுப் போர்” நடந்து வருகிறது.
உகாண்டாவின் ‘இங்கோகோ’ (Ngogo) காடுகளில் வசிக்கும் சுமார் 200 சிம்பன்சிகள், தற்போது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளன.
2015-ஆம் ஆண்டு முதல் இந்த விரிசல் தொடங்கி, தற்போது ஒரு முழுமையான போராகவே இது மாறியுள்ளது.
மேற்கு மற்றும் மத்திய குழுக்களாகப் பிரிந்துள்ள இந்த சிம்பன்சிகள், ஒருகாலத்தில் ஒன்றாக வேட்டையாடி, உண்டு மகிழ்ந்தவை.
ஆனால் இப்போது அவை ஒன்றை ஒன்று கொடூரமாகத் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இந்த மோதலில் இதுவரை 28 சிம்பன்சிகள் கொல்லப்பட்டுள்ளன.
கூட்டத்தின் தலைவர்கள் உயிரிழந்தது, உணவுப் பற்றாக்குறை மற்றும் இனப்பெருக்கத்திற்கான போட்டி ஆகியவை இந்த மோதலுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய இத்தகைய அரிதான நிகழ்வு, மனிதப் போர்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.



