
ஜெலுபு, ஜூன் 15 – சிம்பாங் பெர்தாங் ( Simpang Pertang) பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றத்தை ஏற்படுத்தி வரும் செம்பனை குலைகளின் சக்கையை பதப்படுத்தும் தொழிற்சாலையின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு ஜெலுபு மாவட்ட மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சாலையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக ஜெலுபு மாவட்ட தலைவர் முகமட் ஷஹனஸ் முஸ்தபா ( Mohamad Syahanaz Mustapah ) தெரிவித்தார். ஒரு பயனுள்ள துர்நாற்ற மாசு கட்டுப்பாட்டு அமைப்பு அல்லது கட்டமைப்பு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்பதை நிர்வாகம் நிருபித்த பின்னர் மட்டுமே அந்த தொழிற்சாலை செயல்பட அனுமதிக்கப்படும். மேலும் மாசு ஏற்படாத வரை, துர்நாற்ற மாசைத் தடுப்பதற்கான வழிமுறைகள் முழுமையாகச் செயல்படுவதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
துர்நாற்றத்தினல் சுற்றுப்புற தூய்மைக்கேடு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அது தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை ஜெலுபு மாவட்ட மன்றம் உறுதி செய்யும். இந்த விவகாரத்தில் முழுமையான திருப்தி அடைந்த பின்னரே தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று Mohamad Syahanaz விளக்கம் அளித்தார். 30 நாட்களுக்குள் தொழிற்சாலையைச் சுத்தம் செய்து, அனைத்து செம்பனைக் குலைகளின் கழிவுகளையும் அங்கிருந்து அகற்றுமாறு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் துர்நாற்ற மாசுபாட்டிற்கு இந்தக் கழிவுகளே முக்கியக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது



