
சிரம்பான், ஏப்-7- கம்போங் பாரு ரஹாங்கிலுள்ள ( Kampung Baru Rahang ) சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனுக்கு சொந்தமான வீடு தீயில் அழிந்தது.
நேற்றிரவு சுமார் 9.40 மணிக்கு உள்ளூர்வாசிகள் தன்னைத் தொடர்பு கொண்ட பின்னரே இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்துகொண்டதாக குணசேகரன் கூறினார்.
உண்மையில், அந்த வீட்டில் தற்போது தனது சகோதரர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அவர்கள் அனைவரும் வெளியே உணவு அருந்தச் சென்றிருந்ததாக குணசேகரன் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் தாம் வசிப்பதாகவும் ,தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
வீடு கிட்டத்தட்ட முழுமையாக எரிந்துவிட்டதால் , எந்தப் பொருட்களையும் மீட்க முடியவில்லை, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்வதாக குணசேகரன் குறிப்பிட்டார்.
1990-ல் இந்த வீட்டை வாங்கிய பிறகு, தனது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் உட்பட குடும்பத்துடன் இதில் வசித்து வந்ததாகவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாம் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும், எனினும் தனது சகோதரர் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்ததாக அவர் கூறினார்.
இதனிடையே இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த நடவடிக்கை அதிகாரி முகமட் நஃபி வாஹிட் கூறினார்.



