
கோலாலம்பூர், ஜன 28 – இவ்வாண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு 23 ஆவது ஒப் செலமாட் (Op Selamat) பாதுகாப்பு இயக்கத்தின்போது ரோந்து பணிகளை கோலாலம்பூர் போலீசார் தீவிரப்படுத்துவர் என மாநகர் போலீஸ் துணைத்தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் ( Azry Akmar Ayob) தெரிவித்தார்.
நேற்று தொடங்கிய இந்த நடவடிக்கை பிப்ரவரி 2ஆம்தேதிவரை நடைபெறும். போக்குவரத்து சுமுகமாக இருப்பதை உறுதி செய்வதுடன் குற்றத் தடுப்பு ரோந்து மற்றும் இதர பணிகளிலும் ஈடுபடுவதற்கு 363 போலீஸ்காரர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் மாநகரில் பல்வேறு சோதனை நடவடிக்கையில் 127 போலீஸ்காரர்கள் ஈடுபட்டனர் என 23 ஆவது ஒப் செலமாட் பாதுகாப்பு நடவடிக்கையை புக்கிட் பிந்தாங்கில் தொடக்கி வைத்தபோது அஸ்ரி கூறினார்.
போக்குவரத்து சுமூகமாக இருப்பது மற்றும் சாலையை பயன்படுத்துவோர் பாதுகாப்புடன் தாங்கள் செல்லும் இடங்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதில் இவ்வாண்டு சாலை பாதுகாப்பு இயக்கம் கவனம் செலுத்தும் என அவர் கூறினார். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய 58 இடங்கள் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் 16 பகுதிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.