
சுக்காய், ஏப்ரல் 22 – திரெங்கானு சுக்காய் மாவட்டத்திலுள்ள ஒரு சலவை நிலையத்தில் தனது ஒன்பது வயது மகளை அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான புகார், ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை 7.27 மணிக்கு, காவல் துறைக்குக் கிடைக்கப்பெற்றதாக கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்பெரிதெண்டன் முகமட் ராசி ரோஸ்லி தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் இந்த சம்பவம் ஏப்ரல் 16 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடந்ததாகக் கண்டறியப்பட்டது.
சமூக ஊடகங்களில், பெண்ணொருவர் தனது மகளை அடிக்கும் காணொளி, வைரலானதை தொடர்ந்து இத்தகவல் போலீசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
விசாரித்ததில், 45 வயது நிரம்பிய அம்மாது சலவை இயந்திரத்தின் முன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த அவரது மகளை யாராவது வாகனத்தில் மோதிவிட்டால் என்னாகும் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்யப்பட்டு தடுப்புக்ககாவலில் வைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி கெமாமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, தற்போது அவரது தந்தையின் பராமரிப்பில் இருக்கின்றார்