
உலு சிலாங்கூர், மே-31 – கரப்பான்பூச்சிகள், எலியின் கழிவுகள், மற்றும் தவளைகள் காணப்பட்டதை அடுத்து, சிலாங்கூர் பாத்தாங் காலியில் 7 உணவகங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெறப்பட்ட 14 நாட்களுக்குள் கடைகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட வேண்டுமென, MPHS எனப்படும் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் நினைவுறுத்தியது.
கடைகள் அசுத்தமாக இருப்பதாக பல முறை எச்சரிக்கப்பட்டும் அவற்றின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
இதையடுத்து, Ops Suci என்ற பெயரில் அண்மையில் அங்கு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
18 உணவுக் கடைகளை சோதனையிட்டதில் இந்த 7 கடைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது.
கோழி முட்டைகள் சுத்தமாகக் கழுவப்படாதது, உணவுக் பொருட்களை அடுக்கி வைக்குமிடம் அலங்கோலமாகவும் அசுத்தமாகவும் இருந்தது, உணவுகளைக் கையாள்பவவர்கள் டைஃபாய்ட் தடுப்பூசி போடாதது போன்றவற்றை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தவிர, உணவகக் கழிவுகளை நேரடியாக பொது கால்வாயில் கொட்டியது, எண்ணெய் வடிகட்டும் முறையும் புகைப் போக்கியும் நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது போன்றவையும் கண்டறியப்பட்டன.
உணவுகளைக் கையாள்பவர்களிடமும் மருந்துக்குக் கூட சுத்தம் என்பது இல்லை.
கைவிரல்களில் கூர்மையான நகங்கள் வளர்த்திருந்தது, நகைகள் அணிந்திருந்தது, அப்ரோன் மேலங்கி, தலைமுடியை மறைக்கும் துணி மற்றும் காலணி அணியாதது, போன்ற தவறுகளும் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.