
ஷா ஆலாம், மே-20-தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாராவை முதலில் ஆழமாகப் புரிந்துகொள்ளுமாறு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா விடுத்த கட்டளையை ஏற்று நடப்பதாக, DAP சட்டமன்ற உறுப்பினர் Wong Siew Ki-யும் சிலாங்கூர் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் Ronnie Liu-வும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஷா ஆலமில் உள்ள ருக்குன் நெகாரா நினைவுச் சின்னத்திற்கு வருகை மேற்கொண்ட சுல்தான் ஷராஃபுடின், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இந்த கோட்பாடுகளை முழுமையாக உள்வாங்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
குறிப்பாக Wong Siew Ki, Ronnie Liu இருவரும் மாதத்திற்கு இருமுறை இங்கு வந்து இதனை வாசிக்க வேண்டும் என்றும் சுல்தான் கூறியிருந்தார்.
சுல்தானின் இந்தத் தார்மீகக் கட்டளையைத் தாம் பணிவுடன் ஏற்பதாகக் கூறியுள்ள Wong Siew Ki, மக்கள் சேவையில் இந்த 5 கோட்பாடுகளுமே தமது வழிகாட்டி என்றார்.
இவ்வேளையில், இன்று அந்த நினைவுத்தூணுக்கு நேரில் சென்ற Ronnie Liu, நாட்டின் ஒற்றுமையைக் காக்க இக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தமாக மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மன்னராட்சி மற்றும் தேசியக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்ற சுல்தானின் இந்த அறிவுறுத்தலை பல்வேறு அரசியல் தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.



