
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டில் காய்ச்சல் (Influenza) தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முதியவர்களிடையே அதிகமாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் விகிதம் வெறும் 29 விழுக்காடாக மட்டுமே உள்ளது.
இது குறித்து எச்சரித்துள்ள மலேசிய தொற்றுநோய் நிபுணர்கள், குறிப்பாக நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களும், முதியவர்களும் இந்த காய்ச்சல் காலத்திற்கு முன்பாகத் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஆபத்து பல மடங்கு அதிகம் என மலேசிய நுரையீரல் அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர் Dr ரோஸ்லினா மனாப் (Roslina Manap) கூறினார்.
எனவே, தடுப்பூசியை மருத்துவ பராமரிப்பின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவர் கிளினிக்குகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இந்தத் தடுப்பூசி கிடைக்கிறது.
தகுதியுள்ள முதியவர்கள் அரசு மருத்துவ நிலையங்களில் ‘MySejahtera’ செயலி மூலம் நேரப்பதிவு செய்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க, ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.



