
செராஸ், மே-17 – செராஸ், Taman Taynton View-வில் உள்ள homestay தங்கும் விடுதியொன்றில் பாதி அழுகிய நிலையில் 2 சிங்கப்பூரியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
check-out செய்ய வேண்டிய நேரத்தில் அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போகவே, தங்கும் விடுதி ஊழியர், அறையில் சென்று பார்த்துள்ளார்.
அங்கே 43 வயது ஆடவரும் 33 வயது பெண்ணும் சடலமாகக் கிடந்தனர்.
அறையில் ஒரு துருப்பிடிக்காத எஃகு பாத்திரத்தில் எச்சங்களைக் கொண்ட கரி அடுப்பு, 2 பெட்டிகளில் இன்னமும் பயன்படுத்தப்படாத கரிகள் மற்றும் ketamine போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
தவிர குளிரூட்டியும் ஜன்னல்களும் பிளாஸ்டிக் குப்பைப் பைகள் மற்றும் பிளாஸ்டரால் மூடப்பட்டிருந்தன.
சடலங்களில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை; குற்ற அம்சங்கள் இருந்ததற்கான தடயங்களும் இல்லையென, செராஸ் போலீஸ் தலைவர் அய்டில் போல்ஹசான் தெரிவித்தார்.
இறந்துபோனவர்களுக்கு இடையிலான உறவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றார் அவர்.