
சைபர்ஜெயாவில் 8வது மாடியில் இருந்து விழுந்து 8 வயது சிறுவன் பலியான அதிர்ச்சி சம்பவம்
புத்ராஜெயா, பிப்ரவரி 13 –
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 8 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை உயிரிழந்தான்.
செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர்Asisten Komisioner Norhizam Bahaman தெரிவித்ததாவது, சம்பவம் தொடர்பாக மாலை ஆறரை மணியளவில் உள்ளூர் பெண் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.
அச்சிறுவன் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த பின்னர் உடனடியாக சைபர்ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். எனினும், சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தின் காரணத்தை கண்டறிய செப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வு பிரிவு மேல் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பிரேத பரிசோதனை இன்று மதியம் 12 மணியளவில் சைபர்ஜெயா மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இக்குற்றமானது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



