
கோலாலம்பூர், மே-4- சொந்தமாக வரி வசூலிக்க பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசு அனுமதிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை, பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி நிராகரித்துள்ளார்.
பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் முஹமட் சவாவி சாலேவின் அந்த யோசனை நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று; அதோடு, விரும்பிய வளர்ச்சி வாய்க்காது என்றும் ரஃபிசி சுட்டிக் காட்டினார்.
கிளந்தானில் தண்ணீர் பிரச்னையே பெரும் பிரச்னையாக உள்ளது; ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து முனையக் கட்டுமானமும் முழுமைப் பெறாமல் உள்ளது.
இந்த லட்சணத்தில் கிளந்தான் அரசாங்கத்தால் எவ்வளவு வருமானத்தை ஈட்ட முடியும்?
ஒருவேளை வரி வசூலிப்பில் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டால் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான பிரச்னைகளைக் கிளந்தான் தீர்த்து விடுமா என, தனது சமூக ஊடக பக்கத்தில் ரஃபிசி கேள்வி எழுப்பினார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வரி வசூலிக்கும் உரிமை மத்திய அரசாங்கத்துக்கே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.