
கோலாலம்பூர், டிசம்பர் 31 – வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைநகர் கோலாலம்பூரில் பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை வீசினாலோ, அதிகபட்சம் 2,000 ரிங்கிட் வரை அபராதமும் 6 மாதங்களில் 12 மணி நேரத்திற்கும் மேல் சமூக சேவை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடப்படவுள்ளது.
VM2026 அதாவது Visit Malaysia 2026 ஐ முன்னிட்டு, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL நகரம் முழுவதும் கண்காணிப்பை அதிகரிக்கவுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அடிக்கடி வரும் பகுதிகளில் எச்சில் துப்புதல் மற்றும் சிறிய குப்பைகள் குறிப்பாக சிகரெட் துண்டுகள், பாட்டில்களை வீசுதல் போன்ற செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படவுள்ளது.
அபராதம் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து 2,000 ரிங்கிட் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை விதிப்பது முக்கிய நோக்கம் அல்ல மாறாக மக்கள் தூய்மையைக் கடைப்பிடிக்க பழக்கப்படுத்துவதே முக்கிய இலக்காகும் என்று DBKL சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் டாக்டர் Nor Halizam Ismail தெரிவித்தார்.
மேலும் Jalan Bukit Bintang, Dataran Merdeka, Jalan Tun Perak மற்றும் Brickfields வணிகப்பகுதி ஆகிய நான்கு இடங்கள் ‘குப்பையில்லா மண்டலம்’ என அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் உணவகங்கள் மற்றும் பொது கழிப்பறைகளில் தூய்மை கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மொத்தம் 7,450 உணவகங்கள் தற்போது பரிசோதனையில் இருக்கின்றன. உணவு மாசுபாடு அல்லது எலிகள், கரப்பான் போன்ற நோய் பரப்பும் பூச்சிகள் இருந்தால் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இத்தனிடையே பொது கழிப்பறைகளின் தூய்மைக்கும் DBKL மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
அனைவரும் துப்புரவு விதிகளைப் பின்பற்றி நகரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், DBKL அறிவுறுத்தியுள்ளது.



