
கோலாலம்பூர், மே-29 – தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கை சிலர் மிதிப்பதைக் காட்டும் டிக் டோக் நேரலை வீடியோ குறித்து விசாரிக்குமாறு, மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC உத்தரவிடப்பட்டுள்ளது.
இது அதிகப்படியான செயலாகும் என்பதால் MCMC-யை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாட்சில் கூறினார்.
300 பேர் பார்த்த அந்த டிக் டோக் நேரலை இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்பட்டு, 4 மணி நேரங்களுக்கு இணையத்தில் இருந்துள்ளது.
மலேசியா மற்றும் இலங்கையில் உள்ள இணையப் பகடிவதைக்காரர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாய் தகராற்றின் ஒரு பகுதியே அதுவென நம்பப்படுகிறது.
இந்நிலையில், அவ்வீடியோ தொடர்பான விசாரணைத் தொடங்கியிருப்பதை MCMC உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் நேரலையை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக, MCMC-யின் பாதுகாப்புக் கட்டமைப்பின் தலைமை அதிகாரி சுலைமான் சுல்தான் சுஹாய்புடீன் கூறினார்.
அந்நோக்கத்திற்காக டிக் டோக்கைத் தொடர்புக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
குவைத்தில் வசிக்கும் இலங்கை நாட்டவர் ஒருவர், போலி டிக் டோக் கணக்கு வாயிலான நேரலையின் போது மலேசியக் கொடியை தீ வைத்துக் கொளுத்தியதே பிரச்னையின் ஆரம்பம் என, GHRF எனப்படும் அனைத்துலக மனித உரிமை சம்மேளனம் முன்னதாகக் கூறியிருந்தது.
அச்செயலை மலேசியர்கள் கண்டித்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுகள், ஆபாச வார்த்தைகள் குவிந்தன.
பெண்களை உருவ கேலி செய்து முதல் நாளில் இரு நாட்டு டிக் டோக் பயனர்களும் மாறி மாறி தாக்கிக் கொண்டதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழிப் போட்டுள்ளது.
நேரலையில் சண்டைப் போய்க் கொண்டிருக்க, நூற்றுக்கணக்கானோர் டிக் டோக்கிடம் புகாரளித்தனர்.
ஆனால் டிக் டோக்கோ, விதிமீறல் எதுவும் இல்லை என தெரிவித்து விட்டது.
இது வெறும் ‘சமூக ஊடக நாடகம்’ அல்ல ; மாறாக மனித உரிமை மற்றும் தேசியப் பாதுகாப்பை உட்படுத்தியதென, GHRF கூறியது.