
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் (Tan Sri Shamsul Azri Abu Bakar) அவ்வாறு நினைவுறுத்தியுள்ளார்.
ருக்குன் நெகாரா தேசியக் கோட்பாட்டில் “பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்” என்ற கோட்பாட்டை முக்கியமாகக் கடைப்பிடிப்பவர்கள் அரசாங்க ஊழியர்கள் ஆவர்.
அப்படியிருக்க இது போன்ற அரசு எதிர்ப்புப் பேரணிகளில் பங்கேற்பது முறையற்றது
என்றார் அவர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலகக் கோரி இந்த ‘Turun Anwar’ பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீஸிடம் முறைப்படி தெரியப்படுத்தப்பட்டிருப்பதால், இது சட்டவிரோதப் பேரணியாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், சுமூகமாக நடைபெற ஏதுவாக அப்பேரணிக்கு முழு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
என்றாலும், 2012 அமைதிப் பேரணி சட்டத்தை பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
10,000 முதல் 15,000 பேர் வரை அப்பேரணியில் பங்கேற்கக் கூடுமென போலீஸ் கணித்துள்ளது.