
செரி அலாம், ஜோகூர், மே 13- மே 9-ஆம் தேதி, பண்டார் செரி அலாமில் இரண்டு வீடுகளிலிருந்து, பார்சல்களைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள், ஆடவர் ஒருவரிடம் கையும் களவுமாக மாட்டிய காணொளியொன்று, சமூக வலைத்தளத்தில் வைரைலாகி வருகின்றது.
ஆரம்பத்தில் பார்சல்கள் தங்களுடையது என்று கூறி வந்த அவ்விரு பெண்களும், பலமுறை விசாரித்த பிறகு அருகிலுள்ள வீடுகளில் இருந்து அவற்றை திருடியதாக ஒப்புக்கொண்ட காட்சியை காணொளியில் காணமுடிகின்றது.
இச்சம்பவம் குறித்து 44 வயது நபர் ஒருவரால் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் (Mohd Sohaimi Ishak) கூறியுள்ளார்.
மேலும், இப்புகார் தொடர்பாக, கூரியர் நிறுவனம், பார்சல்களின் உண்மையான உரிமையாளர்கள் மற்றும் சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.