
ஜோகூர் பாரு, ஏப் 13 – ஜோகூர் பாருவில், Taman Ungku Tun Aminahவைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமையன்று சக மாணவன் ஒருவனால் பகடிவதையினால் உதைக்கப்பட்டுத் தள்ளப்பட்டதால் கழுத்து தசைநார் கிழிந்ததோடு நான்கு நாள் மருத்துவமனையில் அனுமதக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தத் தாக்குதல் பள்ளி வளாகத்திற்குள் மதியம் நடந்ததாக ஐந்தாம் படிவ அறிவியல் பிரிவு மாணவியான அவர் தெரிவித்தார் .
தனது நண்பர்களுடன் பள்ளி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தபோது, சக மாணவன் ஒருவன் அவர்களை அணுகி மற்றொரு மாணவரைப் பற்றிக் கேட்டதாகவும் ,அந்த நபரை தனக்குத் தெரியாது என்று அவனிடம் சொன்னபோது, அவன் தனது முதுகில் உதைத்ததால் தாம் கீழே விழுந்து ஒரு மரத்துண்டில் தலை மோதியதாக அந்த மாணவி தெரிவித்தார்.
இதனால் தனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தாம் எழுந்திருக்க முயன்றபோது, அவன் தன் இடுப்பைப் பிடித்து மீண்டும் கீழே தள்ளினான்.
அப்போது தனக்கு தலை சுற்றியதால் உடனடியாக பள்ளியின் சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதிலும் அங்கு தொடர்ந்து வாந்தி எடுத்ததையும் அந்த மாணவி விவரித்தார்.
அதன் பிறகு வீட்டிற்கு செல்ல தாம் அனுமதிக்கப்பட்ட பின் பள்ளிக்கு அருகேயுள்ள நடைபாதை பாலத்தில் கிட்டத்தட்ட மயங்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தன் தோழியின் மூலம் அருகேயுள்ள வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டதை தொடர்ந்து தனது தந்தையிடம் தொடர்பு கொண்டதாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.
தொடர்ந்து தனது தந்தை சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதால் அங்கு நான்கு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றதாக அம்மாணவி கூறினார்.
இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் தந்தையான 41 வயதுடைய Abdul Wahab Abdullah போலீசில் புகார் செய்துள்ளதை வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரடின் ரம்லான் உறுதிப்படுத்தியதோடு இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.



