ஒரே பாலினத் திருமணச் சட்டம் தாய்லாந்தில் அமுலுக்கு வந்தது; சுமார் 2,000 LGBT ஜோடிகள் திருமணம்

பேங்கோக், ஜனவரி-24, தென்கிழக்காசியாவிலேயே ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்த முதல் நாடான தாய்லாந்தில், அச்சட்டம் ஒருவழியாக அமுலுக்கு வந்துள்ளது.
முதல் நாளிலேயே சுமார் 2,000 ஓரினச் சேர்க்கை மற்றும் மூன்றாம் பாலின ஜோடிகள் சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர்.
நேற்று மாலை தாய்லாந்தில் உள்ள 800 மாவட்ட அலுவலகங்களில் அத்தகைய 1,754 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த போது, பலர் ஆனந்தக்கண்ணீர் வடித்தும் ஆரத்தழுவியும் கொண்டனர்.
அவர்களில் முறையே 64, 59 வயதிலான பெண் ஓரினச் சேர்க்கையாளர்களும் அடங்குவர்.
இந்த ஒரு நாளுக்காகத் தான் பத்தாண்டுகளாகக் காத்திருந்தாகவும், சட்டப்படி இணைந்திருப்பதன் மூலம் தங்களின் கண்ணியம் உயர்ந்திருப்பதாகவும் இருவரும் கூறிக் கொண்டனர்.
LGBTQ சமூகத்துடன் ஒத்துபோகும் தாய்லாந்தின் கொள்கையை நீண்ட காலமாகவே உலகமே அறியும்.
ஆண்-பெண் திருமணத்தைப் போன்றே ஒரே பாலினத்தவரின் திருமணத்தையும் பெருவாரியான தாய்லாந்து மக்கள் ஆதரிப்பது கருத்துக் கணிப்புகளிலும் தெரிய வந்துள்ளது.
ஆசியாவிலேயே, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்த பெரிய நாடாகவும் தாய்லாந்து விளங்குகிறது.
2001-ஆம் ஆண்டில் உலகின் முதல் நாடாக ஒரே பாலினத் திருமணத்தை நெதர்லாந்து அங்கீகரித்தது.
அதன் பிறகு இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாடுகள் அத்தகையத் திருமணங்களைச் சட்டப் பூர்வமாக்கியுள்ளன.