
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுனர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா அவர்களின் மறைவு சமூதாயத்திற்கு பெரிய இழப்பாகும். கல்வி உருமாற்று சிந்தனைக்கும் வளர்ச்சிக்கும் அன்னார் ஆற்றிய பங்கு அளப்பரியது என ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
டாக்டர் தம்பிராஜாவின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றம் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் சரவணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
இதனிடையே கல்வி மேம்பாட்டிற்காக தூர நோக்கு சிந்தனையுடன் செயல்பட்ட உன்னத மனிதர் காலஞ்சென்ற டாக்டர் எம். தம்பிராஜா என கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா புகழாரம் சூட்டினார்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் மூலம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட வாழும் சகாப்தமாக வாழ்ந்தவர் பேராசிரியர் தம்பிராஜா என தனது இரங்கல் செய்தியில் நடராஜா தெரிவித்தார்.
தேவஸ்தானத்தின் இனிய நண்பராகவும் அவர் விளங்கி வந்தார். அவரை பிரிந்து துயருறும் அவரது குடும்ப உறப்பினர்களுக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக நடராஜா குறிப்பிட்டார்.