
கோலாலம்பூர், ஜூலை-2 – மலேசியாவில் இணையக் குற்றங்கள், டிஜிட்டல் மோசடிகள் மற்றும் அடையாளத் திருட்டுகளைத் தடுப்பதற்கான 2026 இணையக் குற்றங்கள் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
29 ஆண்டுகள் பழமையான 1997 கணினி குற்றச் சட்டத்திற்கு மாற்றாக இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்புத் துறையில் இந்த சட்டம் ஒரு திருப்புமுனையாக அமையும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹித் ஹமிடி தெரிவித்தார்.
இப்புதிய சட்டத்தின் கீழ், இணைய மோசடிகள் மற்றும் திருத்தப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், சேவை வழங்குநர்களிடமிருந்து தரவுகளைப் பெறவும் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரம் வழங்கப்படுகிறது.
பொது மக்களின் தனிமனித சுதந்திரம் மற்றும் கருத்துரிமைக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்த நிலையில், இந்த சட்ட அதிகாரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படாது என்றும், தகுந்த சட்ட விதிமுறைகளின் படியே அதிகாரிகள் செயல்படுவார்கள் என்றும் துணைப் பிரதமர் உறுதியளித்தார்.
குறிப்பாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுவினருக்கு இச்சட்டம் முழு பாதுகாப்பு வழங்கும் என்றார் அவர்.



