
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல்
கோலாலம்பூர், பிப்ரவரி-11,
மலாக்கா, டுரியான் துங்காலில் போலீஸார் 3 இந்திய ஆடவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலாக்கா மருத்துவமனை மற்றும் இரசாயனத் துறை வழங்க வேண்டிய உடல்கூறு மற்றும் துப்பாக்கி தோட்டா குறித்த ஆய்வறிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
அவை கிடைத்தவுடன், வழக்கு முழுமைப் பெறும் என்றார் அவர்.
சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் விசாரணைக்குக் கூடுதல் ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளன என்பதை IGP சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அண்மையில் அலோர் காஜாவில் நடந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதையும் போலீஸார் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
24 முதல் 29 வயதிலான அம்மூவரும் கடந்தாண்டு நவம்பர் 24-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர், செம்பனைத் தோட்டமொன்றில் அதிகாலை 4.30 மணிக்கு பாராங் கத்தியால் ஒரு போலீஸ்காரரைத் தாக்கிக் காயப்படுத்தியதால், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூட்டை நடத்த வேண்டியதாயிற்றாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், அதனை மறுத்த குடும்பத்தார் மேல் விசாரணைக்கு வற்புறுத்தியதை அடுத்து, சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.



