
ஃபுளோரிடா, பிப்ரவரி-23-அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் மாரா-லாகோ (Mara-a-Lago) இல்லத்தின் பாதுகாப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுதமேந்திய ஆடவன், அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஃபுளோரிடா மாநிலத்தின் Palm Beach பகுதியில் நிகழ்ந்தது.
21 வயது சந்தேக நபர், ஒரு துப்பாக்கியும் எரிபொருள் கொள்கலனும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவனைத் தடுக்க முயன்ற இரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீஸார், ஆயுதத்தை கீழே வைக்கும்படி எச்சரித்தனர்.
ஆனால் அவன் அதனை கேட்காமல் துப்பாக்கியை உயர்த்தியதால், அதிகாரிகள் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக அவனை நோக்கிச் சுட்டனர்.
சூடுபட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
எந்த அதிகாரிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் நடந்தபோது ட்ரம்ப் அங்கு இல்லை; மாறாக தலைநகர் வாஷிங்டனில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையான FBI மற்றும் இரகசிய சேவை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Mara-a-Lago இல்லத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



