
கோலாலம்பூர், ஏப்ரல்-26- நாட்டில் ஊழல் துடைத் தொழிப்புப் பணிகளுக்கு
ஊடகங்களின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும்.
பல ஊழல் சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது தொடங்கி, ஊழல் துடைத்தொழிப்பு முயற்சிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அவ்வாறு புகழாரம் சூட்டினார்.
நேற்றிரவு கோலாலம்பூர் Parkroyal Collection ஹோட்டலில் நடைபெற்ற MACC-யின் ஊடக விருதளிப்பு விழாவில் பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
5-ஆவது முறையாக நடைபெற்ற அவ்விருது விழாவில், பெர்ஜாயா நிர்வாக இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்மான் ஊஜாங், MACC துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி கமாருசமான், MACC வியூகத் தொடர்புப் பிரிவு இயக்குநரும் விருது தேர்வுக் குழுத் தலைவருமான ஹிஷாம் மொஹமட் யூசோஃப், மலேசிய பத்திரிகைக் கழகமான MPI-யின் தலைமை செயலதிகாரி அய்னோல் அம்ரிஸ் இஸ்மாயில் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஊழல் தொடர்பான செய்திகளை அங்கீகரிக்கும் பொருட்டு, சிறந்த செய்திக் கட்டுரை, சிறந்த ஒலி-ஒளி செய்தி, சிறந்த சமூக ஊடக உள்ளடக்கம் என 3 பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட்டன.
இரு சிறப்பு ஜூரி விருதுகளும் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு போட்டிக்கு வந்த படைப்புகள், தல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் தரமாக இருந்ததாகவும் தான் ஸ்ரீ அசாம் பாக்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மலாய், ஆங்கிலம், தமிழ், சீனம் ஆகிய அனைத்து மொழி ஊடகங்களும் பங்கேற்றன