Latestமலேசியா

‘தமிழ்வாணி’ 2025; மலேசிய புத்ரா பல்கலைக்கழத்தின் சொற்போர் கழக தமிழ் செய்தி வாசிக்கும் போட்டி

செர்டாங், மே 24 – மலேசிய புத்ரா பல்கலைக்கழக தமிழ்மொழி சொற்போர் கழக ஏற்பாட்டிலும், சுங்கை பூலோ மலேசிய இந்தியர் இளைஞர் இணை ஏற்பாட்டிலும், நாடு தழுவிய நிலையில் ‘தமிழ்வாணி 2025’ எனும் தமிழ் செய்தி வாசிப்பு போட்டியின் இறுதி சுற்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ புலத்தில் அண்மையில் மிக சிறப்பாக நடந்தேறியது.

இயங்கலையில் அடிப்படைத் தேர்வுச் சுற்றுகளில், நாடு தழுவிய அளவில் 861 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட நிலையில், அதிலிருந்து 30 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றிற்குத் தேர்வாகினர்.

போட்டியாளர்களுக்கிடையே மறைந்திருக்கும் செய்தி வாசிக்கும் திறனை, வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி, தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. செய்தி வாசிப்புக்கே உரிய தொனி, உச்சரிப்பு, உடல்மொழி, முகபாவனை போன்ற கூறுகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 5 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுக் கோப்பையோடு , முதல் நிலை வெற்றியாளருக்கு 500 ரிங்கிட்டும், இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 400 ரிங்கிட்டும், மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 300 ரிங்கிட்டும், நான்காம் நிலை வெற்றியாளருக்கு 400 ரிங்கிட்டும் மற்றும் ஐந்தாம் நிலை வெற்றியாளருக்கு 100 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மலேசிய இந்தியர் இளைஞர் மன்ற உதவித்தலைவர் மற்றும் ஜோகூர் மாநில தலைவர் அரவிந்தன் கணேசன், மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் மூவார் கிளையின் தலைவர் மற்றும் ம.இ.கா இளைஞர் பகுதி பாகோ தொகுதி தலைவர் கிஷன் நாயர் பாஸ்கரன் மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழக தமிழ்மொழி சொற்போர் கழக ஆலோசகர் முனைவர் வீரமோகன் வீரபுத்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துச் சிறப்பித்தனர்.

இச்செய்தி வாசிக்கும் போட்டியின் நடுவர்களாக வணக்கம் மலேசியா செய்திப் பிரிவின் தலைவருக் செய்தி வாசிப்பாளருமான வேதகுமாரி வெங்கடேசன், ஆஸ்ட்ரோ செய்தி வாசிப்பாளர் மகேந்திரன் வேலுப்பிள்ளை மற்றும் மின்னல் எப்.எம். செய்தி வாசிப்பாளர் குலரட்சகி குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை சிறப்புற நடத்துவதற்கு உதவியாயிருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக ஷா ஆலாம் ம.இ.கா-வின் இளைஞர் பிரிவு தலைவர் சுகன் சுப்ரமணியத்திற்கும், மாணவர்களை தயார்படுத்தி உற்சாகத்தோடு அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மலேசிய புத்ரா பல்கலைக்கழக தமிழ்மொழி சொற்போர் கழகம் தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!