
கோலாலம்பூர், மே 10- ஆலயத்தின் கருவறையை விட, அன்னையின் கருவறையே சிறந்தது என ஒளவை பாடியுள்ளார்.
அந்த சிறப்பு மிக்க குணநலன்களைப் பெற்ற அன்னையர்களுக்கு ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அன்னையின் வயிற்றில் இருந்தே இந்த உலகத்தையும், உலக நடப்புகளையும் கவனிக்கத் தொடங்கும் குழந்தை, அவளது வளர்ப்பில் தான் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறது.
வாழ்க்கையில் எத்தனையோ சவால்களையும், சிக்கல்களையும் ஆண்கள் எதிர்கொண்டாலும், கருவிலேயே பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திப்பது தான் தாய்மை.
குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, வேலையையும், பக்குவமாக அணுகி, வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவித சவால்களைச் சந்தித்து, சாதனை படைத்து வருபவர்தான் அன்னை.
அன்னையின்றி நாம் யாருமில்லை, அன்னையின்றி இவ்வுலகம் இல்லை.
ஒரு தாயின் வளர்ப்பில் தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்பது எழுதப்படாத உண்மை.
பொறுப்புள்ள ஆளுமைகளை உருவாக்குவதில் தாயின் அர்ப்பணிப்பு, பங்களிப்பு அளப்பரியது.
ஆகையால், பெண்களின் தனித்தன்மை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்கள் ஒரு தாயாக தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து மேலும் சிறக்க தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்தினார்.