
பாங்காக், ஜூன் 12- 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், தாய்லாந்திற்கு அதிக சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட நாடுகளில் மலேசியா சீனாவை காட்டிலும் முன்னிலையில் உள்ளது என்று தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை மலேசியாவிலிருந்து மொத்தம் 2,041,002 சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில் சீனாவிலிருந்து 2,029,481 பேர் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலகட்டத்தில் தாய்லாந்திற்கு வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 மில்லியனுக்கும் அதிகமான மக்களை எட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் இந்த வருகை, தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 699.3 பில்லியன் பாட் பங்களித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.