
கோலாலாம்பூர், டிசம்பர்-8 – திரங்கானு, குவாலா பெராங்கில் SUV வாகனம் பள்ளத்தில் விழுந்து இருவர் மரணமடைந்த இடத்தில், பொதுப் பணி அமைச்சான JKR-ரே சாலை தடுப்பை அகற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் அமைச்சர் மறுத்துள்ளார்.
சேதமடைந்த சாலைகளில் JKR எப்போதுமே பாதுகாப்பு SOP நடைமுறைகளைப் பின்பற்றும் என, டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி (Alexander Nanta Linggi) தெரிவித்தார்.
இந்நிலையில், மரண விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சாலைத் தடுப்பை யார் அகற்றியது என்பதை கண்டறிய விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
வெள்ளிக் கிழமை நிகழ்ந்த கோர விபத்தில், 52 வயது பள்ளி ஆசிரியரும் இம்மாத இறுதியில் அவரை திருமணம் செய்துகொள்ளவிருந்த பள்ளி சிற்றுண்டிச் சாலை பணியாளரான 34 வயது பெண்ணும் பயணித்த SUV வாகனம், சுமார் 61 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்து இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
போலீஸ் விசாரணையில், அந்த SUV வேகமாக ஓட்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லையெனக் கண்டறியப்பட்டது.
எனினும், சம்பவ இடம் நிலச்சரவு நடந்த பகுதி என்பதால் அதிகாரிகள் அங்கு வைத்திருந்த எச்சரிக்கைப் பலகைகளும் சாலைத் தடுப்புகளும் பொறுப்பற்ற நபர்களால் அகற்றப்பட்டதை போலீஸ் அம்பலப்படுத்தியது.



