
செந்தோசா, மார்ச்-9-இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலம் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.
ஒரு நபர் திரிசூலத்தை மிதித்து சேதப்படுத்தியதாக கூறப்படும் இச்சம்பவம், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதோடு, பல்லின மக்கள் வாழும் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
எனவே எந்த மதத்தின் புனிதச் சின்னங்களையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என குணராஜ் வலியுறுத்தினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைக் கருத்தில் கொண்டு, மத அவமதிப்பில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அப்புகாரில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸை அவர் கேட்டுக்கொண்டார்.
அதே சமயம், இவ்விவகாரத்தில் பொது மக்கள் அமைதியாக இருந்து எந்தவித தூண்டுதல்களுக்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



