
தெஹ்ரான், ஜூன்-17 – ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் மக்களில் ஆயிரக்கணக்கானோர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கையாக அத்தியாவசியப் பொருட்களையும் சேமித்து வைத்து உடன் கொண்டு சென்றுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம் ஈரானிய பொது மக்களை தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காக சில பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இது வான்வழித் தாக்குதல்கள் அதிகரிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.
என்றாலும் ஈரானிய அதிகாரிகள் இந்த எச்சரிக்கைகளை “உளவியல் போர்” என நிராகரித்து, மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
இருப்பினும் மக்களின் அச்சத்தைத் தடுக்க முடியவில்லை.
தலைநகரிலிருந்து வெளியேறும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் இருப்பதைக் காட்டும் காட்சிகளை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 224 பேராக உயர்ந்துள்ளது.
அவர்களில் 90% பொது மக்கள் என ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே சமயம் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பொது மக்களே.