
புத்ராஜெயா, ஏப்ரல்-21-வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ‘துராப்’ (Turap) எனப்படும் புதிய முறை இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை.
இது குறித்துப் பரவி வரும் விமர்சனங்களுக்கு மனிதவள அமைச்சான KESUMA அவ்வாறு பதிலளித்துள்ளது.
இப்புதிய முறை குறித்து அமைச்சரவை அளவில் இன்னும் ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் இதனை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதற்கு முன் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என அது உறுதியளித்துள்ளது.
‘துராப்’ (Turap) முறை தேவையற்றது என பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ள நிலையில், KESUMA இவ்வறிகையை வெளியிட்டது.
வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்யவும், இடைத்தரகர்களின் சுரண்டல்களைத் தவிர்க்கவுமே இந்த புதிய முறை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள முறைகளில் உள்ள பலவீனங்களைக் களைவதே இதன் முதன்மை நோக்கம் என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியது.
தொழிலாளர் விவகாரங்களில் அரசாங்கம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காது; முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
அதுவரை யூகங்களை நம்ப வேண்டாம் என அமைச்சு கேட்டுக்கொண்டது.



