
அம்பாங், மே-9- சொக்சோ எனப்படும் தொழிலாளர்களுக்கான சமூக நல பாதுகாப்பு சந்தா பங்களிப்பைச் செய்யாத முதலாளிமார்களுக்கு, அவ்வாறு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு வழங்கும் வகையிலான இச்சலுகை நீட்டிப்பில், அவர்களுக்கு 50 விழுக்காடு அபராதக் கழிவு வழங்கப்படும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று அதனை அறிவித்தார்.
எனினும், அம்முதலாளிமார்கள், சொக்சோ பங்களிப்பு வழக்கு, நீதிமன்ற நடவடிக்கை, தொழிலைப் பதிவுச் செய்யாததால் அபராதம் விதிக்கப்பட்டது, விபத்துகளைத் தாமதாக அறிவித்தது போன்ற பிரச்னைகளில் சிக்காதவர்களாக இருக்க வேண்டுமென்றார் அவர்.
இச்சலுகை 100 மில்லியன் ரிங்கிட் சந்தா பாக்கியை வைத்துள்ள 215,172 முதலாளிமார்களை உட்படுத்தியுள்ளது.
அவர்களில் 198 முதலாளிகள் 990,000 ரிங்கிட்டுக்கு இன்னமும் அபராத பாக்கியை வைத்திருப்பதாக, அம்பாங், சொக்சோ கோபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்டீவன் சிம் சொன்னார்.
இந்த Bulan Pemutihan சலுகை இவ்வாண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்தாண்டை விட 40 விழுக்காடு அதிகமான முதலாளிமார்கள் சொக்சோவிடம் பதிந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக 8,234 முதலாளிமார்களும் 61,746 தொழிலாளர்களும் பதியப்பட்டுள்ளனர்; அவர்களில் 46,094 பேர் உள்நாட்டினர் ஆவர்.
இந்த வரவேற்பைக் கருத்தில் கொண்டே அச்சலுகைக் காலத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
நோன்ப் பெருநாள் விடுமுறை, தொழிலாளர் தின விடுமுறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டோம்; எனவே, தன்னார்வ முறையில் முன்வந்து பதிவுச் செய்திட முதலாளிமார்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக இது அமைவதாக ஸ்டீவன் தெரிவித்தார்.
மறுத்தால், 5,000 ரிங்கிட் வரையிலான அபராதத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.
அதுவே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10,000 ரிங்கிட் வரையிலான அபராதமும், ஈராண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாமெனவும் அவர் எச்சரித்தார்