
புத்ராஜெயா, மே-23-புத்ராஜெயாவில் நேற்று, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புத் துறை அமைச்சர் முக்தாருடின் தலைமையிலான பேராளர் குழுவைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், மலேசியாவில் உள்ள இந்தோனேசியத் தொழிலாளர்களின் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
அமைச்சர் ரமணன், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு, பொருளாதார வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்கும் முக்கிய பங்காற்றுகிறது எனக் குறிப்பிட்டார்.
மலேசிய–இந்தோனேசிய உறவானது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலம் ஆகிய துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பாக உள்ளது.
இந்த இணக்கமான சூழல், எதிர்காலத்தில் மேலும் வலுப்பெற்று, இரு நாட்டு மக்களின் பரஸ்பர செழிப்புக்கும் கூட்டு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை, மலேசிய–இந்தோனேசிய உறவின் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.



