
கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆர் கட்சி அனுப்பிய காரணம் கோரும் கடிதத்துக்கு பதிலளித்த அவர், சீன நாளேடான Sin Chew Daily-யிடம் தான் முன்வைத்த கருத்துக்கள் மலாய் மொழியை நன்றாகப் புரிந்தவர்களுக்கு தெளிவாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.
_”நான் பி.கே.ஆர் வேட்பாளராக நிற்பேன் என்று நினைக்கவில்லை. பண்டானில் போட்டியிடுவேன், ஆனால் எப்படி போட்டியிடுவேன் என்பது இரகசியம்”_ என அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான அவர் அப்பேட்டியில் கூறியிருந்தார்.
இது சர்ச்சையாகி, பி.கே.ஆர் கட்சி காரணம் கோரும் கடிதத்தை அனுப்பி நேற்று நள்ளிரவுக்குள் பதில் அனுப்ப உத்தரவிட்டது.
இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள ரஃபிசி, அக்கடிதத்தின் நகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், _”நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பி.கே.ஆர் உறுப்பினராகவும், பண்டான் எம்.பி.யாகவும் தொடர்வேன். அதன் பின், என் சொந்தத் திட்டங்களை அமைக்கும் உரிமை எனக்கு உண்டு. அப்போது கட்சித் தாவல் தடைச் சட்டம் என்னைக் கட்டுப்படுத்தாது”_ என்றார் அவர்.
பி.கே.ஆர் மத்தியத் தலைமைத்துவக் குழு இன்று கூடும் நிலையில், ரஃபிசியின் இந்தக் கருத்துக்கள் கட்சியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.



