
கோலாலாம்பூர், மே-7-நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரை மாற்ற எந்தத் திட்டமும் இல்லை என, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெளிவுப்படுத்தியுள்ளார்.
14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருந்தாலும், அவர் தலைமையிலான நெகிரி மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் மீது அம்னோ இன்னும் உறுதியாக உள்ளது.
ஆதரவு வாபஸ் பெறுதல் அரசியல் நிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பினாலும், கூட்டணி கட்சிகளுடன் ஒத்துழைப்பு தொடரும் என்று சாஹிட் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதி மற்றும் உண்டாங் எனப்படும் 4 பாரம்பரியத் தலைவர்களுக்கு இடையிலான விவகாரத்தில் அமினுடின் மூக்கை நுழைக்காத வரை அவருக்கான அம்னோவின் ஆதரவு தொடரும் என்றார் அவர்.
முன்னதாக இது தொடர்பில் எழுந்தப் பிரச்னைக்கு அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கூடி இணக்கம் கண்டனர்.
என்றாலும், அமினுடின் மீது தாங்கள் நம்பிக்கை இழந்திருப்பதாக அந்த 14 அம்னோ உறுப்பினர்களும் அறிவித்தது குறித்து கேட்டபோது, துணைப் பிரதமர் அவ்வாறு சொன்னார்.



