
கோலாலம்பூர், ஜூன்-5 – பங்சாரில் கட்டுமானத் தளமொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம், கடந்த மாத இறுதியில் அப்பகுதியில் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே.
உடலில் பச்சைக் குத்தியிருந்ததை வைத்து அது காணாமல் போன Jordan Johnson-Doyle-லே என அடையாளம் காணப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா கூறினார்.
இன்று நடைபெற்ற சவப்பரிசோதனையில், உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் நெஞ்சில் காயமேற்பட்டதே அவரின் மரணத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்திலும் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை; எனவே இச்சம்பவம் ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ருஸ்டி சொன்னார்.
எனவே பொது மக்கள் யூகங்களை எழுப்ப வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
மென்பொருள் பொறியியலாளரான Johnson-Doyle வியட்நாமிலிருந்து மே 17-ஆம் தேதி மலேசியா வந்தார்.
தனியாளாக மலேசியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்தவர், கடைசியாக மே 27-ஆம் தேதி பங்சாரில் உள்ள Healy Mac’s Irish Bar மதுபான விடுதிக்குச் சென்றது, அவரது தாயாருக்கு அவர் அனுப்பியப் புகைப்படம் வாயிலாக தெரிய வந்தது.
பிறகு அவரைக் காணவில்லை என ஜூன் 2-ஆம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று பங்சாரில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் மின்தூக்கி செல்லும் பாதையில் அவரின் சடலம் சிக்கிக் கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.