
கோலாலம்பூர், ஜூன் 16 – இரண்டு மாதங்களுக்கு முன்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்திற்குச் செல்லும் போது காணாமல் போன பமீலா லிங் விவகாரத்தில் விசாரணை நிலை குறித்து போலீசிடமிருந்து இன்னும் தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லையென அவரது குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர். தொடக்கத்தில் கோரப்பட்டதைத் தாண்டிய தகவல்களைச் சமர்ப்பிப்பது உட்பட விசாரணைக்கு உதவ குடும்பத்தினர் முயற்சித்த போதிலும், போலீஸ் துறையிடமிருந்து புதிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென பமிலா லிங்கின் குடும்பத்தை பிரதிநிதிக்கும் வழக்கிறஞர் சங்கீத் கவுர் (Sangeet Kaur) தெரிவித்தார்.
47 நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், ஆனால் தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையென போலீசார் கூறியுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் MACC அதிகாரிகளிடம் விசாரித்தார்களா மற்றும் பமிலா லிங் ஊழல் குற்றவாளிகளுக்கு வழங்கும் தகவலின் தன்மையை தீர்மானித்தார்களா என்பது உட்பட பல கேள்விகளையும் சங்கீத் கவுர் எழுப்பியுள்ளார்.
தாய்லாந்து எல்லைக்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் பமிலா லிங் கடத்தப்பட்டதாக சிசிடிவி காட்சிகளில் அடையாளம் காணப்பட்ட கார்களில் ஒன்று தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் அவர் வினவினர். தடயவியல் சோதனை குறித்த புதிய தகவல்கள் எதுவும் இன்னும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பமிலா லிங் எல்லை தாண்டி அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும் , இன்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீசிற்கு இன்னும் எச்சரிக்கப்படாதது ஏன் என்றும் சங்கீத் கேள்வி எழுப்பினார்.