
மிலான், ஜூன்-12 – பயணப்பெட்டி அதிக பாரமாக இருப்பதாகக் கூறப்பட்டதால் விமான நிலையத்தின் தரையில் உருண்டு பிரண்டு தர்க்கம் நடத்திய பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த அச்சுற்றுப்பயணி, ஜூன் 8-ஆம் தேதி இத்தாலியில் உள்ள மிலான் மல்பென்சா விமான நிலையத்தில் தனது carry-on சூட்கேஸை ஊழியர்கள் சோதனை செய்தபோது, அவர் விமானத்தில் ஏறும் கேட்டை அடைந்திருந்தார்.
அப்போது பயணப்பெட்டி அதிக பாரமாக இருப்பதால் – ஒன்று கூடுதல் பணம் செலுத்த வேண்டும் அல்லது சில பொருட்களை வீசி விட வேண்டுமென அப்பெண்ணிடம் சொல்லப்பட்டது தான் தாமதம்… அடுத்து அவர் அரங்கேற்றிய ‘நாடகம்’ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தரையில் உருண்டு, கால்களை மேலும் கீழும் ஆட்டி ஒரு சிறு குழந்தை போல் அவர் அழுது ‘அடம்பிடித்தார்’.
அந்த நடுத்தர வயது பெண்ணின் ‘சேஷ்டையை’ எதிர்பார்க்காத விமான நிலையப் பணியாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்று தோல்வியடைந்தனர்.
கடைசியில் வேறு வழியின்றி அம்மாதுவை அவ்விமானத்தில் ஏற விடாமல் தடுத்து அங்கிருந்து அதிகாரிகள் அகற்றினர்.
பின்னர் ஒருவழியாக ஆசுவாசம் ஆன அம்மாது, புதிய டிக்கெட் எடுத்து பயணப்பெட்டியை முறைப்படி அறிவித்து அடுத்த விமானத்தில் பயணத்தைத் தொடர்ந்தார்.
அம்மாதுவின் ‘அட்டகாசத்தை, பார்த்த சீன நாட்டு வலைத்தளவாசிகள் இதென்ன சிறுபிள்ளைத்தனமான காரியம் என முகம் சுளித்தனர்.
வெளிநாட்டில் இது ஒரு ‘வெட்கக்கேடான’ செயல் என்றும் பலர் சாடினர்.