
மாரான், ஜூன்-20 – பஹாங்கில் நேற்று மாலை, ஒரு மணி நேர இடைவெளிக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 2 சகோதரிகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்; மேலும் எழுவர் காயமடைந்தனர்.
முதல் விபத்து, மாரான், Jalan Besar Jengka 19 எனுமிடத்தில் மாலை மணி 6.45 அளவில் நிகழ்ந்தது.
23 வயது Dinie Hanis, மற்றும் அவரது 19 வயது தங்கை Dinie Nasuha ஆகிய இருவரும் பயணம் செய்த Toyota Unser வாகனம், Perodua Axia காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலின் பலத்த தாக்கத்தால் அவர்கள் சென்ற வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்ததில், அந்த இரு சகோதரிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சோகம் நிகழ்ந்து ஒரு மணி நேரத்திற்குள், பெக்கான், ஜாலான் குவாந்தான்-செகாமாட் (Jalan Kuantan-Segamat) சாலையில் மற்றொரு விபத்து நிகழ்ந்தது.
Chini தீயணைப்பு நிலையத்திற்கு அருகே மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் இருவர் உயிரிழந்த வேளை, மேலும் எழுவர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரு விபத்துகள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



