
கோலாலம்பூர், ஏப்ரல்-15, மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி, முழு அரசு மரியாதையுடன் இன்று காலை நல்லடக்கம் செய்யப்படுகிறார்.
தேசிய மசூதியில் மாவீரர்கள் கல்லறையில் நாட்டின் அந்த ஐந்தாவது பிரதமருக்கு தேசிய நல்லடக்க சடங்கு வழங்கப்படும் என, பிரதமர் துறை அறிவித்துள்ளது.
‘பாக் லா’ என நாட்டு மக்களால் பாசத்தோடு அழைக்கப்படும் துன் அப்துல்லாவின் நல்லுடன் தொழுகைக்காக காலை 8 மணிக்கு மஸ்ஜித் நெகாரா கொண்டுச் செல்லப்பட்டது.
காலை 11 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை பொது மக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வருவோர் முறையான ஆடைக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறகு மதிய சொஹோர் (zohor) தொழுகைக்குப் பிறகு அன்னாரின் நல்லடக்கச் சடங்கு நடைபெறும்.
மஸ்ஜித் நெகாராவுக்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள அனைத்து கட்டடங்களும், நல்லடக்கச் சடங்கும் முடியும் வரை தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2003 முதல் 2009 வரை மலேசியப் பிரதமராக பதவி வகித்தவரான துன் அப்துல்லா அஹ்மட் படாவி, முதுமைக் காரணமாக தனது 85-ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.