
சிட்னி, ஜூன்-30 – கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது போலீஸ்காரர்களைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக, நாட்டின் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் தான் ஸ்ரீ தோமி தோமஸின் மகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கலைந்துசெல்லுமாறு விடுக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றாமல் பிடிவாதம் காட்டியதற்காக, நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி ஹானா தோமஸுக்கு அந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
போராட்டத்தின் போது முகத்தில் கடும் காயங்களுடன் 35 வயது ஹானா கைதுச் செய்யப்பட்டார்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஹானா தனது ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயத்திலிருப்பதாக, அவரின் வழக்கறிஞர் ABC News தொலைக்காட்சியிடம் கூறினார்.
இந்நிலையில் Bankstown-னில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஹானா முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஹானாவைத் தவிர்த்து, போலீஸாரின் உடல் கேமராவைத் திருடியதன் பேரில் 24 வயது இளைஞன் கைதானது உட்பட மேலும் 4 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது.