
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம் என, ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ கூறினார்.
குடும்ப வருமானம் RM1,500 க்கும் குறைவாக இருக்க வேண்டும், மேலும் இந்த PPR வீடுகள் தற்காலிக வசிப்பிடமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
ஆனால், சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருவதோடு, வருமான வரம்பை மீறியும் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
PPR மற்றும் மாநில அரசின் வாடகை வீடுகளில் RM2 மில்லியனை மீறும் வாடகை பாக்கியும் இந்த நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாக தாமான் மங்கிஸ் PPR வாடகையாளர்களில் 18 குடும்பங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் வீடுகளை காலி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சுந்தராஜூ சொன்னார்.
PPR வீடுகளில் வாடகைக்கு இருக்க 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; வருமான அளவைப் பொருத்து அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அது நீடிக்கப்படலாமென்றும் அவர் தெரிவித்தார்.



