
கோலாலம்பூர், ஜூன் 19 – நான்கு நாட்களுக்குள் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் அண்மையில் நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் குண்டர் கும்பல் அம்சங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தொடக்கக்கட்ட போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விரண்டு சம்பவங்களையும் போலீசார் இன்னும் தீவிரமாக விசாரித்து வருவதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் யுசோப் ஜன் முகமட் ( Mohamed Usuf Jan Mohamad ) தெரிவித்தார்.
அதே வேளையில் இந்த இரு சம்பவங்களிலும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு கூலிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனரா ? இல்லையா? என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் போலீசார் தொடந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என அவர் கூறினார்.
மேலும் அனைத்து சந்தேக நபர்களையும் வேட்டையாடும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராசில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்த போதிலும், தலைநகரில் பாதுகாப்பு நிலை இன்னும் கட்டுப்பாடு மற்றும் அமைதியாக இருப்பதாக போலீஸ்துறை உறுதியளித்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் பகை காரணமாக குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ( Razarudin ) கூறியிருந்தார்.