
கோலாலம்பூர் ,மார்ச் -6-Pudu Pasarரில் தடைசெய்யப்பட்ட மீன்களுடன் சேர்த்து, பல்வேறு வகையான ஆமைகளை வெளிப்படையாக விற்பனை செய்த பல வளாகங்கள் சோதனை செய்யப்பட்டன.
ஆறு அலங்கார மீன் வளாகங்களில் காலை 11 மணியளவில் இந்த நடவடிக்கை தொடங்கியதாக கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசு பிதேசங்களுக்கான மீன்வள இயக்குநர் Suhana Kasiron தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது arapaima, Sturgeon , peacock, bass உட்பட பல்வேறு தடைசெய்யப்பட்ட மீன்கள் உட்பட 35,674 ரிங்கிட் மதிப்புள்ள 675 மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடைசெய்யப்பட்ட மீனின் விலை இனத்தைப் பொறுத்து மாறுபட்டதாக இருந்ததோடு அங்கு பறிமுதல் செய்யப்பட்ட அரபைமா ஒவ்வொன்றும் 300 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டது.
அரபைமா வேகமாக வளரும் இனமாகும், இது பொதுவாக பொழுதுபோக்கு பகுதிகளில் காணப்படுகிறது .
சோதனை செய்யப்பட்ட ஆறு வளாகங்களும் மீன்வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி மற்றும் உரிமம் இல்லாத குற்றத்தைச் செய்ததாக சுஹானா கூறினார்.
மலேசிய மீன்வளத் துறை , புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை, வனவிலங்கு தேசிய பூங்காக்கள் துறையுடன் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



