
புதுடெல்லி, மே-23 – ‘ஓயாத’ மோதலின் அடுத்தக் கட்டமாக இந்தியாவும் பாகிஸ்தானும் தூதரக அதிகாரிகளை மாற்றி மாற்றி வெளியேற்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.
எனினும் உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.
இது 2 வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிக்கையாகும்.
முன்னதாக, மே 13-ஆம் தேதியன்று, உளவு பார்த்த குற்றத்தின் கீழ் பாகிஸ்தான் அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றியது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த தொடர் நடவடிக்கைகளால் ‘சினமடைந்த’ பாகிஸ்தான் தற்போது பதிலடியில் இறங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ஓர் இந்திய அதிகாரி உளவுப் பார்த்ததாகவும், எனவே 24 மணி நேரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இரு நாடுகளும் மேற்கொண்ட இராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தூதரக அளவிலான மோதல்கள் தொடருகின்றன.