
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டின் பொது சுகாதாரத் துறை தற்போது கடுமையான ஆள்பல பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கு தவறான கொள்கைகளே முக்கியக் காரணம் என, மலேசிய மருத்துவ மன்றமான MMA கூறுகிறது.
பல ஆண்டுகளாக திட்டமிடலில் சொதப்பல், தெளிவற்ற தொழில் முன்னேற்றப் பாதைகள் மற்றும் கடினமான பணிச்சூழல் ஆகியவை இந்த பிரச்னையை மோசமாக்கியுள்ளதாக, MMA தலைவர் டத்தோ Dr திருநாவுக்கரசர் ராஜு கூறினார்.
இவ்வாண்டு புதிய பட்டதாரி மருத்துவர்களுக்கான _housemanship_ கட்டாய பயிற்சிகளுக்கு 5,000 இடங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், வெறும் 529 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன.
இது, பல மருத்துவ பட்டதாரிகள் அரசு துறையைத் தவிர்க்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம் என்றார் அவர்.
தவிர, ஒப்பந்த அடிப்படையிலான ஆள்சேர்ப்பு முறையும், அதிக வேலைச்சுமையும், போதிய ஆதரவு இல்லாமையும் மருத்துவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, வேலையிலிருந்து ‘விடுதலை’ பெற்றால் போதும் என்ற நிலைக்குத் தள்ளி விடுவதாக திருநாவுக்கரசர் கூறினார்.
மருத்துவ மாணவர்கள் மத்தியிலும் நம்பிக்கை குறைந்து வருகிறது; குறிப்பாக பொது சுகாதாரச் சேவையின் எதிர்காலம் பற்றி 40%-க்கும் குறைவானவர்கள் மட்டுமே நம்பிக்கையுடன் உள்ளனர்.
எனவே, உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த ஆள்பல பற்றாக்குறை மேலும் மோசமடையும்…
இதனால், 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பெரிதும் நம்பியுள்ள பொது சுகாதாரத் துறை மேவும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என Dr திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார்.



