
புதுடெல்லி, ஜூன்-4 – வடகிழக்கு இந்தியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடைமழை கொட்டித் தீர்த்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசம், அசாம், சிக்கிம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்கு மேலே தொங்கு பாலத்தில் ஒருவர் உயிருக்குப் போராடுவதையும், கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகள் கிட்டத்தட்ட கூரை வரை மூழ்கி விட்டதையும் வைரலாகியுள்ள வீடியோக்களில் காண முடிந்தது.
அசாம் மாநிலத்தில் 132 ஆண்டு கால ‘சாதனையை’ முறியடித்து ஒரே நாளில் 415.8 மில்லிமீட்டர் மழைக் கொட்டியது.
அங்கு 360,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை ஜூன் 5 வரை அடை மழைப் பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேசத்தில் ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயரலாம் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், நிலைமை மேலும் மோசமாகலாம் எனக் கூறப்படுகிறது.
இயற்கை நிலப்பரப்பு, நகரமயமாக்கல், மோசமான வடிவால் முறை, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் வெள்ளம் மோசமாகியிருப்பதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.