
கோலாலம்பூர், மே-18- மோசடி கும்பல்களிடம் பறிகொடுத்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி இணையத்தில் வலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, பொது மக்கள் நினைவுறுத்தப்படுகின்றனர்.
அதுவும் அரச மலேசியப் போலீஸ் படையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி அந்த விளம்பரங்கள் facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
பொது மக்களை நம்ப வைப்பதற்கான முயற்சியே அது; எனவே அதில் சிக்கி மோசம் போக வேண்டாம் என, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹஸ்புல்லா அலி கேட்டுக் கொண்டார்.
அந்த விளம்பரங்கள் முழுக்க முழுக்க போலியாகும்; அவற்றில் கூறப்படும் எந்தவொரு சேவையையும் போலீஸ் வழங்கவில்லை.
எனவே, இது போன்ற விளம்பரங்களைப் பார்த்ததும் யோசிக்காமல் செயல்பட்டு, மேலும் மேலும் பிரச்னையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.