
கோலாலம்பூர், மே-24 – 218-ஆவது போலீஸ் தினத்தை ஒட்டி அரச மலேசியப் போலீஸ் படையின் இந்து உறுப்பினர்கள், கோலாலம்பூரில் PULAPOL எனப்படும் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள ஸ்ரீ மகா முனிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாட்டின் அமைதி மற்றும் போலீஸ் படையின் பாதுகாப்பு வேண்டியும், உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் அவ்வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய அந்நிகழ்வுக்கு, புக்கிட் அமான் குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநர் DCP டத்தோ குமரன் கருப்பண்ணன் தலைமையேற்றார்.
புக்கிட் அமான் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பணிபுரியும் சுமார் 500 இந்து போலீஸ்காரர்கள் அச்சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
போலீஸ் படையில் நிலவும் பல்லின ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
புக்கிட் அமானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதித் துறையின் துணை இயக்குநர் DCP M.V. ஸ்ரீ குமார் மாதவன் நாயர், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் உதவி இயக்குநர் SAC G. சீதா தேவி M. G. நாயர், ஓய்வுப் பெற்ற போலீஸ் மூத்த அதிகாரி DCP டத்தோ நரேனசேகரன் தங்கவேலு, DCP டத்தோ மனோகரன் கணபதி உள்ளிட்டோரும் அதில் கலந்துசிறப்பித்தனர்.