மலாக்கா: ஓட்டுநர் உரிமம் இன்றி சொகுசு காரை ஓட்டிய ரோஹிங்கியா அகதி; Vellfire காரை பறிமுதல் செய்த JPJ

மலாக்கா, மே-24,
மலாக்கா சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நடத்திய அதிரடிச் சோதனையில், Toyota Vellfire இரக சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
UNHCR அட்டையை வைத்திருந்த ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த ஒரு நபர், எந்தவொரு முறையான ஓட்டுநர் உரிமமும் இன்றி இந்த ஆடம்பர காரை ஓட்டிச் சென்றது சோதனையில் தெரியவந்தது.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த வாகனம் உடனடியாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த வெளிநாட்டு ஓட்டுநரும் அவருடன் பயணித்தவர்களும் சம்பவ இடத்திலிருந்து வேறு வழியின்றி கால்நடையாகவே நடந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டினர் உரிமம் இன்றி சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இத்தகைய கடுமையான சோதனைகள் தொடரும் என JPJ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



