
ஜோகூர் பாரு, ஜூலை.08-ஜோகூரில் Taman Universityயில் உள்ள நாசி கண்டார் உணவகமொன்றில், இன்று அதிகாலை FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் இடையே கைகலப்பு மூண்டது. அர்ஜெண்டினாவும் எகிப்தும் சந்தித்த அவ்வாட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பால் வாக்குவாதம் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவ்வேளையில், உணவகம் செயல்படத் தொடங்கி 10 ஆண்டுகளில் இது போன்ற சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என அதன் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கைகலப்பு இறுதியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அது தீவிரமடையவில்லை என்றும் அவர் கூறினார். உணவகத்திற்கு குறிப்பிடத்தக்க சேதமோ அல்லது நிதி இழப்போ ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்த பிற ஊழியர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.இருப்பினும், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று சேமடைந்ததாக தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அந்த ஊழியர் மேலும் சொன்னார். அச்சம்பவத்தின் காட்சிகள் CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளன. அவை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முன்னதாக அச்சண்டை மீதான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இன்றைய ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-2 என எகிப்தை வீழ்த்தி உலகக் கிண்ண கால்பந்தின் காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.



