
பெய்ஜிங், ஜூலை.08-சீனாவின் தெற்கே Guangxi Zhuang எனுமிடத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாம்புப் பண்ணையொன்றின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்து அங்கிருந்து 900-க்கும் மேற்பட்ட பாம்புகள் தப்பி வெளியேறியுள்ளன. அவற்றில் விஷமுள்ள நாகப்பாம்புகளும் அடங்கும். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மீட்புக் குழுக்களை அனுப்பி, குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர்.
Maysak புயலைத் தொடர்ந்து கனமழை பெய்து, வெள்ளம் பாம்புப் பண்ணை அமைந்திருந்த பகுதியை மூழ்கடித்தது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சில கிராமவாசிகள் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டதாகவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வேளையில், தப்பிச் சென்ற பாம்புகளைப் பிடிக்கவும், அபாயங்களைக் குறைக்கவும் அவசரகாலக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பாம்புகள் வெள்ள நீரில் நீந்துவது போன்ற காட்சிகள் முன்னதாக பல ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. பரபரப்பான அந்தக் காணொளிக் காட்சிள் வைரலாகி, பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனா முழுவதும் கடுமையான வானிலையால் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை. 130,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.



